சீர்காழியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அப்படியே விட்டுச்சென்றதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி நகராட்சியின் 24 வார்டுகளில் வசிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று நகர் முழுவதும் இணைய வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறி இயந்திரங்கள் மூலம் நிலத்தை தோண்டி வயர்களை பதித்து வருகிறது.
அப்பணியின் போது சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யாமல் தொலைத்தொடர்பு நிர்வாகத்தினர் அப்படியே விட்டுச் சென்றனர்.
இதனை கவனிக்காத மாநகராட்சி நிர்வாகம் வழக்கம்போல் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டப்போது உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக வழிந்தோடியது.
வறட்சி காலத்தில் இவ்வாறு தண்ணீர் வீணாக செல்வது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
—வேந்தன்







