புதுச்சேரியில் ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் இன்று முதல் நடைபெறுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை விடுமுறை அறிவித்தது.
இருப்பினும், காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. தற்போது புதுவையில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளியாக 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகளும் இன்று முதல் நடைபெறுகிறது.
-ம.பவித்ரா








