தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது.
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் சுழற்சி முறையில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, வகுப்புகள் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து திறக்கப்படும் என தமிழ்நாடுஅரசு முன்பே அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை வரும் 12-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இதில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர். பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகள், இருக்கைகள் போன்றவற்றின் விவரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.