ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலின், கம்பம் திருவிழாவை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி வெகுவிமரிசையாக நடத்தினர்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா பூச்சாட்டுகளுடன் தொடங்கிய நிலையில், அதனை தொடர்ந்து கம்பம் நடுவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கம்பம் தயாரிக்க கடம்பூர் மலைப்பகுதிக்கு, கோயில் நிர்வாகத்தினர் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆலமரத்தை வெட்டி லாரி மூலம் எடுத்து வந்தனா். அவ்வாறு வெட்டி எடுத்து வரப்பட்ட ஆலமரத்தை, ஆலயம் முன்பு வைத்து 18 அடி உயரத்திற்கு கம்பம் வடிவமைக்கப்பட்டு ஆலயம் முன் கம்பம் நடும்விழா நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கம்பத்தை தூக்கி எடுத்து கொண்டு ஆலயம் முன்பு நட்டனர். அதன் பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கம்பம் தான் இந்தியாவிலேயே மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆலயத்தின் முக்கிய விழாவான குண்டம் திருவிழா வரை தினந்தோறும் காலை நேரத்தில் ஆலயம் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பூசி பெண்கள் வழிபடுவார்கள். இத்திருவிழா வரும் 3ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ள நிலையில் 4-ம் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
—-ரூபி காமராஜ்







