ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வேப்பூரில் நடைபெற்ற வார சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை
நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று
நடைபெற்ற வார சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டார கிராமங்களான பெரியநெசலூர்,
சேப்பாக்கம், கண்டப்பங்குறிச்சி, சிறுபாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட
கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது வருமானத்திற்காக வளர்க்கப்படும்
ஆடுகளை விற்பனைகாக இந்த வார சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த வார சந்தைக்கு விழுப்புரம், திருச்சி,சேலம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாரச்சந்தையில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இரவு 10 மணிக்கு துவங்கிய வாரச்சந்தை இன்று காலை வரை நடைபெற்றது.ஒரு ஆட்டின் விலை ரூ.4000 முதல் ரூ.15,000 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் இந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
செம்பட்டியில் களைகட்டிய ஆடுகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வெள்ளிக்கிழமைதோறும் வாராந்திர ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்ணிட்டு செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.







