சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், நட்சத்திர சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இது வரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா








