சசிகலாவிடம் லஞ்சம் பெற்று, சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக மாநில முதன்மை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது லஞ்சம் பெற்று அவர்களுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என சமூக ஆர்வலர் கீதா என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றச்சாட்டிற்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்திய நாராயணன், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறைரீதியான அனுமதிக்கு காத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதுவரை குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, 30 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும், அதற்குள் உரிய அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதில் தவறு ஏற்பட்டால் கர்நாடக முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.







