வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலா

சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம்…

சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டு நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே சென்னையின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சியாளர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட செல்வதால், அதிகாரிகளால் பாதிப்புகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த முடிவதில்லை. ஆட்சியாளர்களுக்கு வரைபடம் காட்டி, விளக்கம் அளிப்பதிலேயே அதிகாரிகள் நேரத்தை செலவிடுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன், மீட்புப்பணியில் ஈடுபடுவோருக்கும் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற அவர், பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிமுக தொண்டர்களும், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணம் திமுக ஆட்சிக்காலங்களில் எவ்வித வடிகால் வசதியும் இன்றி தொலைநோக்கு பார்வையில்லாமல் நகரத்தின் முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என்று மக்கள் கருதுவதாகவும் சசிகலா  குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.