நடிகை சமந்தா, பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ 12. 5 லட்ச மதிப்பிலான காரை பரிசாக வழங்கி உள்ளார்.
பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்தவர் சமந்தா. இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன்தான் நாக சைதன்யா.

நடிகை சமந்தா சமீபத்தில் ’சாம் சாம்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்வில் பெண் ஆட்டோ ஓட்டுநர் கலந்துகொண்டார். அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரின் பெற்றோர் மரணமடைந்ததால், அவர் தனியாக 7 சகோதரிகளைக் காப்பாற்றிவருகிறார். மேலும் அவருக்குக் கிடைக்கும் வருமானம் வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்நிலையில் அவருக்கு நடிகை சமந்தா ரூ 12. 5 லட்ச மதிப்பிலான காரை பரிசாக வழங்கி உள்ளார். இயல்பாகவே நடிகை சமந்தா உதவும் மனம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்தச் செய்தி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.







