சேலம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் வையாபுரி திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதிமுகவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பேரூர், நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. அப்போது, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது விருப்ப மனுவை பெற்றார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஆர்.இளங்கோவனும் மனுவை பெற்றார். இந்நிலையில், அதிமுக தலைமையிலிருந்து கழக அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளலார் பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறி சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் வையாபுரி திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் புறநகர் மாவட்ட செயலாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவன் அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.இளங்கோவன் ஏற்கனவே கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்றும் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்து பணியாற்றி வைப்புத் தொகையை உயர்த்தி அவர் சாதனை படைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். குற்றச்சாட்டு தெரிவித்த நபருக்கு பதவி கிடைக்காத காரணத்தால் சொல்லி இருக்கலாம் என தெரிவித்த பழனிசாமி, ஜனநாயக முறைப்படி அதிமுக தொண்டர் பதவிக்கு வரலாம் அதன் அடிப்படையில்தான் இளங்கோவனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.