சேலம் அருகே சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
ரவிக்குமார். இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு சுப
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் ஏழு பேருக்கும்
முன்பதிவு செய்திருந்தார். நள்ளிரவில் பேருந்திற்காக பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே அவர்கள் காத்திருந்தனர்.பின்னர் சேலத்தில் இருந்து அவர்கள் முன்பதிவு செய்த பேருந்து வந்தது. அப்போது, ரவிக்குமார் அவரது குடும்பத்தினருடன் பேருந்தில் ஏறினார். மற்ற பயணிகளும் பேருந்தில் ஏறிகொண்டிருந்தனர். அந்தவேளையில், அந்த வழியாக மண் ஏற்றி வந்த கண்டெய்னர் ஒன்று சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ரவிக்குமார் மற்றும் அவரது தந்தை திருநாவுக்கரசு, செந்தில்வளவன், சுப்பிரமணி மற்றும் பேருந்து கிளீனர் தீபன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற ஏத்தாப்பூர் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தில் ரவிக்குமார் உட்பட குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்