இந்தியாவில் வங்கிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வங்கிகளின் வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதற்கு சனி,ஞாயிறு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் போது அனுமதி இல்லாமல் இருந்தது. இப்போது ஆர்டிஜிஎஸ் எனப்படும் இணையதள பரிமாற்றங்கள், ஐஎம்பிஎஸ் என்ற மொபைல் வழி பணப் பரிமாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும்.
அதே நேரத்தில் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட் செய்வது குறித்த பணபரிமாற்றங்களை வங்கி அலுவலக நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
இதில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
இந்த நடைமுறை அமலுக்கு வரும் போது வங்கிகளின் வாயிலாக சம்பளம் தரும் நிறுவனங்கள் இனி சனி,ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வங்கி விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்ய முடியும்.
அதே போல வங்கி கடன்களுக்கான இஎம்ஐ தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் டெபிட் செய்வதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.
சம்பளம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிடோரின் பென்ஷன் தொகையையும் விடுமுறை தினங்களில் வங்கிகளில் கிரெடிட் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.







