சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு..!!

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல்,…

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாலை வேளையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

இதேபோல  சென்னை புறநகரில் மாலை 6 மணி முதல் ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால்  நனைவதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் பலர் மேம்பாலங்களின் அடியிலும் , நிழற்குடைகளிலும் ஒதுங்கினர். இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என பலர் மழைக்காக ஒதுங்கி இருந்தனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக, பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த விபத்தில் 30 மேற்பட்டோர் சிக்கினர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் சிக்கி கொண்ட கொண்ட நபர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தி. நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய  மூன்று பகுதிகளில் இருந்து  தீயனைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்தது.

மேற்கூரையை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரத்தை வைத்து தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை தொடங்கினர்.  இந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்தவர்கள்  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தீயணைப்பு துறை மற்றும் சைதாப்பேட்டை காவல் துறை விசாரணையை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். இடிபாடுகளில் சிக்கிய 6பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை விழுந்த விபத்தில் கந்தசாமி (56) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு துணை மேயரை தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..

” சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்த பெட்ரோல் பங்கின் கூரை விழுந்து, 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பலியானார், மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு சென்ற போது பலியானார் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஒரு இறப்பு நேர்ந்து உள்ளது 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியன் ஆயில் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். நெடுஞ்சாலைத் துறையோ மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர்களை வைத்து துண்டித்தால் அதில் இருந்து பறக்கும் நெருப்புத் துளிகள் பெட்ரோல் பங்க் என்பதால் பெரிய விபத்தாக நேரிடும் வாய்ப்பிருக்கிறது அதனால் அந்த பணியை செய்ய வேண்டாம் என்று நெடுஞ்சாலைத் துறைகளை தடுத்திருக்கிறோம்.

தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மேற்கூரையை கிரேன் வைத்து அப்புறப்படுத்தி உள்ளே யாரும் இல்லை என்று உறுதி செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் உள்ளார்கள், அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறப்பு ஒன்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.