ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, உக்ரைனில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அவசர சேவை அமைப்பு அறிவித்துள்ளது. பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் என நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உக்ரைனின் அவசர சேவை அமைப்பு, ஒவ்வொரு மணி நேரமும் குழந்தைகள், பெண்கள், ராணுவ வீரர்கள் என பலரும் உயிரிழந்து வருவதாகக் கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைனுக்கான உயிரிழப்புகள் அதிகரித்துள்ள அதேநேரத்தில், உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்தினரும் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6 ஆயிரம் ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மறுத்துள்ள ரஷ்யா, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக, அவ்விரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ல் உள்ள தனது தூதரகத்தை ரஷ்யா மூடியது. இதையடுத்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது தூதரகத்தை, உக்ரைன் மூடியது. மேலும், இரு நாடுகளும் தங்கள் தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்றுக்கொண்டன. இந்நிலையில், ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள தனது துணை தூதரகத்தை, உக்ரைன் மூடியது. மேலும், அங்கு பணியில் உள்ள பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.