உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள 1263 அடி உயரம் கொண்ட மிக பெரிய தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவம், தொடர்ந்து 6 நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் சிதலமடைந்து வருகிறது.
அந்த வகையில், கார்கீவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள உலகின் 2-வது உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆயிரத்து 263 அடி உயரம் கொண்ட அந்த கோபுரம் சேதமடைந்துள்ளது.
இதற்கிடையே, தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து, கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வரும் நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள், உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, அங்குள்ள ரயில் நிலையங்களை தஞ்சமடைந்தனர்.








