உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன.
அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.
அதே வேளையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் உறுப்பினர் மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக தடை செய்துள்ளதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
உக்ரைனில் இந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த உலக டென்னிஸ் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளதோடு, ரஷ்யாவில் நடைபெறும் அனைத்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் நிகழ்வுகளையும் காலவரையின்றி ரத்து செய்து அறிவித்துள்ளது.
மேலும், அக்கூட்டமைப்பு உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், உக்ரைன் மக்களுடன் இந்த கடினமான காலத்தில் துணை நிற்பதாகவும், ரஷ்ய மற்றும் பெலாரஸ் டென்னிஸ் வீரர்கள் தனிநபர்களாக போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளது. அதோடு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









