நான் திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வரும் 31ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்க உள்ளது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்த நிலையில் தேமுதிக சார்பில் ஈரோடு மாவட்ட செயளாலரான ஆனந்த் போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அனகாபுரம் மோகன்ராஜ் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில்
போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர்
ஆனந்த் ஆகியோர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு சந்தித்தனர்.
அப்போது பேசிய தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கூறியதாவது..
“நான் திமுகவிற்கு செல்வதாக வந்த தகவலில் உண்மையில்லை. கிழக்கு தொகுதியில் தேமுதிக வெற்றிபெறுவது உறுதி .மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க உள்ளோம்” என தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய கொள்கை பரப்பு செயலாளர் அனகாபுரம் மோகன்ராஜ் கூறியதாவது..
“தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை
இழந்திருக்காது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வெற்றிபெறும். கேப்டன்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகர் ஆகியோர் தேர்தல்
பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி தேமுதிக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் “ மோகன்ராஜ் தெரிவித்தார்.
– யாழன்







