பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல் மே 21ஆம் தேதி வெளியாகும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நடப்பு ஆண்டு இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது. விருப்பம்உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக மே 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்காக இதுவரை 1 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த 1 லட்சம் விண்ணப்பங்களையும் தகுதியானவை / தகுதியற்றவை என்று சான்றிதழ்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. வரும் மே 18-ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல் 21ஆம் தேதி வெளியிடப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.