“மார்ச் 8 முதல் மகளிருக்கு மாதம் ரூ.2500” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு!

டெல்லியில் உள்ள மகளிருக்கு மார்ச் 8ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். 

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்டியை கைப்பற்றியது. இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையும் படியுங்கள் : நாதக-வில் இருந்து விலகினாரா காளியம்மாள்?

பாஜகவின் பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிப்பட்டன. இந்த சூழலில், முதலமைச்சர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரேகா குப்தா நேற்று முன்தினம் (பிப்.20) டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, டெல்லியில் உள்ள மகளிருக்கு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.