கோயில்களில் கணினி மையங்கள் மூலம் ரூ.200 கோடி வசூல்-அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு திருக்கோயில்களுக்கு ரூபாய் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதுகுறித்து இந்து சமய…

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் துவங்கப்பட்டு திருக்கோயில்களுக்கு ரூபாய் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த 08.10.2021 அன்று கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 01.11.2021 அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை/குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 01.07.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.06.2022 அன்றுடன் முடிவடைகிறது.

இந்த பசலியில் துறை நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை -1 ரூ. 30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை-2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான திருக்கோயில்களான சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.6.29 கோடியும், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்காநகர் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி திருக்கோயிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை/குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.