வெளிநாட்டு குதிரைகளை பராமரித்துத் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர்(47). இவர் துபாயில் வசித்து வருகிறார். வெளிநாட்டு அரேபிய குதிரைகளை பல லட்சத்திற்கு விலைக்கு வாங்கி இந்தியாவில் குஜராத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண்ணை அமைத்து விற்பனை செய்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் முகநூலில் அறிமுகமான கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்ச வேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன்(26) என்பவர் ஜெயா நாயரை தொடர்பு கொண்டார். தான் பொள்ளாச்சி பகுதியில் குதிரைப்பண்ணை வைத்து இருப்பதாகவும், தங்களது பண்ணைக்கு வெளிநாட்டு குதிரைகளை கொடுத்தால் பராமரித்து விற்பனைக்கு தயார் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹரிவராசன் தன்னுடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன்(30), தந்தை சீனிவாசன்(58) ஆகியோர் இந்த பண்ணை நடத்த உதவியாக இருப்பதாகவும் தெரிவித்ததையடுத்து 15 குதிரைகளை கொடுத்து பராமரிக்குமாறு ஜெயா நாயர் கொடுத்துள்ளார். மேலும் குதிரைகளை பராமரிக்க தீவனம் உள்ளிட்ட செலவுகளுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டு மாதந்தோறும் ஜெயா நாயர் ரூ.3 லட்சம் அனுப்பி வந்துள்ளார்.
இதற்கிடையே, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஜெயா நாயரின் பண்ணைக்கு குதிரையை ஒருவர் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. அந்த தகவலை விசாரித்தபோது, அது பொள்ளாச்சி ஹரிவராசன் தான் என்பதை ஜெயாநாயர் அறிந்தார். தங்கள் பண்ணைக்கு வளர்க்க கொடுத்த குதிரையை , தங்களது பண்ணைக்கே விற்க முயல்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் ஹரிவராசன் தன்னை மோசடி செய்வதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் அனுப்பிய பணத்தை குதிரை பராமரிப்புக்கு பயன்படுத்தாமல் மோசடி செய்து இருப்பதுடன், சில குதிரைகளை விற்று மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், முறையான பராமரிப்பின்றி 15 குதிரைகளில் 2 குதிரைகள் உயிரிழந்ததும் தெரியவந்தது. மொத்தம் பல்வேறு தவணையாக இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஜெயா நாயர் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் குதிரையை பராமரிப்பதாக கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஹரிவராசன், அவருடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 11 குதிரைகளும் மீட்கப்பட்டன. கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.