எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராமம் கொஹைன் போதை பொருளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் போதை பொருட்களை கடத்தி கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசல் டோரஸ் (வயது 26) என்ற இளம்பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரித்தனர். அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
https://twitter.com/ChennaiCustoms/status/1557321573673369600
இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விலை உயர்ந்த போதை பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.11 கோடி 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராம் எடை கொண்ட ‘கொஹைன்’ போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த வெனிசுலா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை யாருக்காக கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் கும்பல் யார்? என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







