காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு; காதலர்களின் விபரீத முடிவு

நாங்குநேரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மகள் சுதா…

நாங்குநேரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மகள் சுதா (22) நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் அவரது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையாவும் (24) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சுப்பையாவிற்கு மூத்த அண்ணன் இருவர் திருமணமாக வேண்டிய நிலையில் உள்ளதாலும் சுதா மேல் படிப்பை முடிக்க வேண்டி இருப்பதாலும் இருவரது வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடுமாறு இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார்.

இதனை அடுத்து அவரை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி சுப்பையா உயிரிழந்தார். சுப்பையாவின் இறுதி சடங்கிற்கு சுதாவின் பெற்றோர்கள் சென்றனர். வீட்டில் தனியாக இருந்த சுதா தனது காதலன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் வாழ்வில் விரக்தி அடைந்து, கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு தூக்கில் தொங்கினார்.

சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . காதலர்கள் இருவரும் உறவினர்களாக இருந்த போதிலும் பெற்றோர்கள் எதிர்ப்பால் இருவரும் உயிரை மாய்த்துக்  கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரின் உயிரிழப்பு குறித்து நாங்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.