5 மதுபாட்டில்களை குடித்தால் ரூ.10 ஆயிரம்… பந்தயத்தால் பறிபோன இளைஞர் உயிர்!

கர்நாடகாவின் இளைஞர் ஒருவர், பந்தயம் கட்டி 5 மதுபாட்டில்களை முழுமையாக குடித்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டு, தண்ணீர் கலக்காமல் ஐந்து மது பாட்டில்களை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புஜாரஹல்லா கிராமத்தை சேர்ந்த கார்த்திக், தனது நண்பர் வெங்கட ரெட்டியிடம் 5 மதுபாட்டில்களை முழுமையாக குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார்.

பின்னர் தண்ணீர் கலக்காமல் ஐந்து மது பாட்டில்களையும் முழுமையாக குடித்துள்ளார். மதுபானத்தை குடித்து முடித்த சிறிது நேரத்திலேயே, கார்த்திக் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவர் இறப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு ஒரு பெண்குழந்தைக்கு தந்தையானார். இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முல்பாகல் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.