இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் புதுக்கோட்டை மீனவர் ஒருவர் மாயமான நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமீபத்தில் இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த அக்.13ம் தேதி புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது.
இதில் மீனவர்களின் படகு ஒன்று சேதமடைந்தது கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மீனவரை காணவில்லை.
இதனையடுத்து “சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்.” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது கப்பலை மோதிக் கவிழ்த்து ராஜ்கிரண் என்ற மீனவரைக் கொன்ற சிங்களப் படையினர், அவரது உடலையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்.
சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்.
கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினர் மீது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதை விடக் கடுமையான நடவடிக்கைகளை சிங்களக் கடற்படையினருக்கு எதிராக அரசு மேற்கொள்ள வேண்டும்.” என டிவிட்டரில் அன்புமணி பதிவிட்டுள்ளார்.