தூத்துக்குடியில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்த நிலையில், முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக, புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது போலீசார் மீது துரைமுருகன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரவுடி துரைமுருகன் உயிரிழந்தார். அதன்பின் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து என்கவுன்ட்டர் நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டறிந்தனர்.







