அதிமுக யாருக்கு சொந்தம் என்ற பங்காளி பிரச்சனை எங்கு சென்றாலும் தீரவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த கூட்டத்திலும் இந்த பிரச்சனை மேலோங்கியது. அங்கு அப்படி என்ன நடைபெற்றது என்பதை பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் இன்று காலை கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு பத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல் ஆளாக வருகை தந்தவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ். இவரது இருக்கை முன்பு அதிமுக என்ற அடையாள போர்டு வைக்கப்பட்டிருந்தது. இவரைத்தொடர்ந்து பல்வேறு கட்சியை சேர்ந்த நபர்கள் வருகை தந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில், சிறிது நேரத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவருடன் பொள்ளாச்சி ஜெயராமனும் வருகை தந்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது என ஜெயக்குமார் தேடினார். அப்போது கோவை செல்வராஜிற்கு அடுத்த இருக்கை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தார்.
உடனே அவர் அருகில் அமர்ந்த ஜெயகுமார், யாரும் எதிர்பாரதவிதமாக கோவை செல்வராஜ் முன்பு அதிமுக என வைக்கப்பட்டிருந்த அடையாள போர்டை தமது முன்பு எடுத்து வைத்தார். இதனை பற்றி கோவை செல்வராஜ் பெரிதாக சட்டை செய்யவில்லை. இருப்பினும் பார்த்த மற்ற கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். இவர்களது பங்காளி சண்டைக்கு அளவே இல்லையா ? என கமென்ட் அடித்துக்கொண்டனர்.
அதிமுக தங்களுக்கே சொந்தம் என அதிமுகவின் இரு பெரும் தலைவர்களாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூறிக்கொண்டாலும், இருவரில் யார் கட்சி மீது உரிமை கோர முடியும் என்பது குறித்து நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்கு இருப்பதால் இவர்களது இதுபோன்ற நடவடிக்கைகளால் கேலியும், கிண்டலுமாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க தேர்தல் ஆணையத்தின் திட்டமிட்ட கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி நடைபெறுவது குறித்து விளக்கப்பட்டது. இப்பணிகளை வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அதற்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ள 6 பி பார்ம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.