இந்தியாவினுடைய மொத்த செல்வத்தில் 40 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதி அளவிலான மக்கள் தொகையின் நாட்டின் செல்வத்தில் 3 சதவீத சொத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் ஆக்ஸ்பாம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இந்திய பொருளாதார சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், இந்தியாவின் பத்து பணக்காரர்களுக்கு 5 சதவீத வரி விதித்து அந்த நிதியை கொண்டு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியும். கவுதம் அதானி என்ற ஒரு கோடீஸ்வரருக்கு பெறப்படாத ஆதாயங்கள் மீது வரி விதித்தால் 1.79 லட்சம் கோடி ரூபாய் வரும். இந்த பணத்தை வைத்து 50 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்துக்களுக்கு ஒரு முறை 2 சதவீதம் வரி விதித்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கான ரூ.40,423 கோடியை பெற முடியும்.
அதுமட்டுமல்லாமல், ஆண்-பெண் ஊதிய வேறுபாடு குறித்தும் ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண் சம்பாதிக்கும் ஒரு ரூபாய்க்கு பெண்கள் 63 பைசா மட்டுமே வருமானமாக பெறுகின்றனர். இந்த சமத்துவமின்மை கிராமங்களில் பணியாற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் இடையே அதிகமாக இருக்கிறது என ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 166 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் 100 பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 54.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்த தொகை இந்தியாவின் 18 மாதங்களுக்கான முழு பட்ஜெட்டுக்கு சமமானது என ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.