காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவுடன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில் சிபல். மூத்த வழக்கறிஞரான இவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி வெற்றியைத் தேடித் தந்துள்ளார். 2004 முதல் 2014 வரையிலான மத்திய காங்கிரஸ் அரசில் மிக சட்டம், தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். 2016 முதல் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், கட்சியில் கலகக் குரல் எழுப்பிய ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் கபில் சிபல். அத்துடன் உத்தர பிரதேச ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக சமாஜ்வாதி ஆதரவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் உடனிருந்தனர்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், “காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த 16ஆம் தேதி விலகிவிட்டேன். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். நான் எப்போதும் நாட்டிற்காக சுயேச்சையாக குரல் கொடுக்க விரும்புகிறேன்” என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.