பாம்பன் பாலத்தில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாராயணன், முகேஷ் ஆகிய இருவரும் இன்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் மண்டபத்தில் இருந்து பாம்பன் நோக்கி கடலில் அமைந்துள்ள பாம்பன் பாலம் வழியாக சென்றனர்.
அதே பகுதியில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாலத்தில் நடுவில் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முகேஷ் 200 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கடலில் விழுந்து தத்தளித்தார். நாராயணன் பாலத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த முகேஷை அருகில் இருந்த மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி மீட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த நாராயணன் மற்றும் முகேஷை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நாராயணன் என்பவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 6 பேரும் எந்த ஒரு காயங்கள் இன்றியும் உயிர் தப்பினர். இது தொடர்பாக பாம்பன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement: