மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களைக் கோரும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும் போது, அவர்களின் சாதி பிரிவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதும், உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளதும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/draramadoss/status/1631565513523605504
உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்றும், உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், உர மானியம் வழங்குவதற்கு சாதிப் பிரிவுகளை மத்திய அரசு கோருவது, உழவர்களை காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : நான் ஜெயிலுக்கு போறேன்…. – பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி
உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து, அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், உழவர்களின் இந்த ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உழவுத் தொழில் புனிதமானது, அனைவருக்கும் பொதுவானது, அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், உரம் வாங்கும் உழவர்களின் சாதிப்பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென்பொருளில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.







