சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில், வீரதீர செயல்களை புரிந்தவர்களுக்கான பதக்கங்களை முதலைமைச்சர் வழங்கினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், உயிருக்குப் போராடிய இளைஞரை தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூரி வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி, கோவை வனக் கால்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய சிறுவன் லோகித், சென்னை திருவொற்றியூரில், கட்டட விபத்தின் போது, பலரை காப்பாற்றிய தனியரசு, திருப்பூரில், நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன், சுதா ஆகிய 8 பேருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் கோவையைச் சேர்ந்த ஜே.முகம்மது ரஃபிக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கமும், திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதிக மகசூல் பெற்ற விவசாயி ராமசாமிக்கு, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருதும் வழங்கப்பட்டது.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக, காவல் துணை கண்காணிப்பாளர் தெட்சணாமூர்த்தி, உளுந்தூர் பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சக்தி, காவல் ஆய்வாளர் குமார், முசிறி எஸ்ஐ. சிதம்பரம், சுங்குவார் சத்திரம் நுண்ணறிவு பிரிவு தலைமை காலவர் அசோக் பிரபாகரன், ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த காவல்நிலையங்களாக, திருப்பூர் தெற்கு நகர காவல் நிலையம் முதலிடத்தையும், திருவண்ணாமலை தாலுக்கா காவல் நிலையம் 2ம் இடத்தையும், மதுரை இ 3 காவல் நிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அந்தந்த காவல்நிலையங்களின் ஆய்வாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.