உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக் கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்த கூடாது எனவும், அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்ட் அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.