கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அகற்றக் கோரியும், தேவையான இடங்களில் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வலியுறுத்தியும்தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அகற்றக் கோரியும், தேவையான இடங்களில் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் இன்று அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் 600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 86 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கும்பகோணம் கோட்டத்தில் உள்ள 235 நேரடி கொள்முதல் நிலையங்களில் 53 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய முடியவில்லை எனவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்கள் அமைக்கப்படவில்லை. எனவே தேவையான இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளை அமைத்து கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு செல்ல வலியுறுத்தி கும்பகோணத்தில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-அனகா காளமேகன்







