எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில்…

சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு
ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் ஒரே நாளில் இன்று
தொடங்கப்பட்டது. அதில், சைதை தொகுதி வண்டிக்காரன் தெரு மேற்கு மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நகராட்சி நிர்வாக த்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 15-35 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பெய்த 10 சென்டி மீட்டர் மழையில் பெரிய பாதிப்பு இருந்தது. முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி நகராட்சிதுறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். அதனால் 7 மாதங்களுக்கு உள்ளாகவே 90% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் பாதிப்புகளை சொல்வதற்கு மட்டுமே பொதுமக்கள் அதிகாரிகளிடம் வருவார்கள். ஆனால் தற்போது அதற்கு மாற்றாக பொதுமக்களும், தன்னார்வலர்களும் நன்றி சொல்லி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மழை வெள்ளத்தில் மிதப்பதற்கு பதிலாக மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள்.

மழை வந்த பின் மஞ்சள் காமாலை, சளி உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். அதனால் தான் இந்த சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடக்கிறது. ஒரே நாளில் ஒரு
மாநகரத்தில் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் சேர்ந்து நடைபெறுகிறது.

இன்று மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள்
நடத்தப்படும். ஏற்கனவே மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் என்று 389 வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முகாம்களை நடத்தி வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தால் கூட சென்னைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சென்னை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று நிதி ஒதுக்கி தந்து பணிகளை முறையாக செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் மழை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை தயாராக உள்ளது. சென்னையில் 27,000 சாலைகள் உள்ளது. அதற்கான ரூ.8000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.2400 கோடி சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.