தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
மின் கட்டண உயர்வை கண்டித்தும், பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பெண் நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்காமல், அவர்களின் கணவர்கள் பினாமி போல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியாளர்களின் மடியில் நிறைய கணம் உள்ளதாக கூறிய தினகரன், தங்களை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் எனவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்கும் மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை, நல்லாட்சி வேண்டும் என்றுதான் வாக்களிப்பர். ராஜாஜி, காமராசர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக மக்களை எஜமானார்களாக கருதி நடந்த ஆட்சி. எம்.ஜி.ஆர். தயவால் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. ஆனால். எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்து கட்சியை விட்டு நீக்கினார்.
எம்.ஜி.ஆர். மறைவின் பிறகு தொண்டர்கள் குழப்பத்தில் இருந்ததால் விபத்தாக தி.மு.க. ஆட்சி அமைந்தது. நிதிநிலை மோசமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர் தி.மு.க.வினர். பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது. தவறு செய்தால் அமைச்சர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை போல கண்டிப்புடனும், மக்களிடம் கனிவாகவும் இருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருந்தவரை நீட் இல்லை, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் இல்லை. ஜெயலலிதா இயற்கையான தலைவர், வாரிசு தலைவரோ, உருவாகப்பட்ட தலைவரோ அல்ல. ஜெயலலிதா தனக்கு பிறகு யாரையும் கட்சி தலைமைக்கு ஏற்பாடு செய்யவில்லை. தலைவர் பதவி வாரிசு பதவியில்லை என ஜெயலலிதா தொடர்ந்து கூறி வந்தார். யார் தலைவராக வர வேண்டும் என தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆ.ர் கூறியிருந்தார்.
இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால்,மற்றவர்களோடு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து எதிர்ப்போம். தி.மு.கவை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை. கடந்த முறை இதே கருத்தை முன்வைத்தேன். ஆனால் சிலரது ஆணவ போக்கால் அது ஈடேறவில்லை இவ்வாறு அவர் கூறினார்.