பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களுக்குத் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான, ராஷ்மிகா, அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இப்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, பாலிவுட்டில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன்‘மிஷன் மஜ்னு’, அமிதாப்பச்சனுடன் ‘குட் பை’ ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள். இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், ’ரசிகர்களில் ஒருவர் என்னைத் தேடி அதிக தூரம் நடந்து என் வீட்டிற்கு சென்றதாக இப்போதுதான் அறிந்தேன். தயவு செய்து அப்படி யாரும் செய்ய வேண்டாம். நான் நிச்சயமாக உங்களை ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்கள் அன்பை இங்கே காட்டுங்கள். நான் மகிழ்ச்சியடைவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆகாஷ் திரிபாதி என்ற தெலங்கானா ரசிகர், கர்நாடகாவில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டே சென்றுள்ளார். சந்தேகப்பட்ட சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவரைத் தடுத்த போலீசார், கர்நாடகாவில் ராஷ்மிகா இருக்கும் பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது என்றும், அவர் இப்போது மும்பையில் இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து அந்த ரசிகர், சொந்த ஊர் திரும்பினார். இந்த தகவலை வைத்தே, ராஷ்மிகா மந்தனா இப்படி ட்வீட் செய்துள்ளார்.