பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு சாத்தான்குளம் வர்த்தக சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் மதுரம் செல்வராஜ், மெயின் பஜார் பகுதியில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து நூதன முறையில் கண்டனத்தை தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் தினமும் மாற்றம் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள்ள நேரத்திலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை மெல்ல மெல்ல அதிகரித்து இன்று 100 ரூபாயை தாண்டியுள்ளது.

விருதுநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.16 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதன்முறையில் 100 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலையும் அதிகரித்து 94 ரூபாய் 14 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய் 16 பைசாவாக உள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 104 ரூபாய் 22 பைசாவாக உள்ளது. இதே போல ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நகரங்களில் நேற்று பெட்ரோல் விலை ரூபாய் 100 ஐ தாண்டியது. அதைப்போல் இன்றும் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 தாண்டியும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக்கொண்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







