புழல் சிறையில் ராம்குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ம் ஆண்டு சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டதைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு ஆஜரான புழல் சிறை வார்டன் பேச்சுமுத்து, தனது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது எனவும் அரசுக்கு இதில் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் போதிய அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள ஆணையம், ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளது.
ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு
மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித
உரிமைகள் ஆணையம், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான
அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது.