ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நாட்டின் மூலை முடுக்கிலும் உள்ள செய்திகளை நம் கண் முன் கொண்டு வந்து சேர்ப்பது பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள். வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் அயராது பாடுபட்டு அனைத்து செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் தான். கொரோனா காலகட்டத்தில் கூட பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு, அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.