“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

“சமூக நீதிப்பேரவை வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களின் நோக்கம் ஒவ்வொரு அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான். ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியுள்ளோம். மாநாட்டின் தொடர்ச்சியாக கட்சியை அமைப்ப ரீதியாக தயார்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

நெருக்கடி நிலை சலசலப்பு அனைத்தும் மாறிவிட்டது. சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது. மிக விரைவில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சந்தித்து பேசுவார்கள். கூட்டணி தொடர்பாக தற்போது எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. கூட்டணி என்பது தேர்தல் நெருங்கும் போது பேசி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.