பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று டுவிட்டர் பதிவுகளில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.








