அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரவில்லையென்று சொன்ன பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்கவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு, தேர்தல், கொரோனா இரண்டாவது அலை, உடல்நலம் சம்பந்தமாக அமெரிக்கா சென்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப்போனது.
இந்த சூழலில், தற்போது மக்கள் மன்றத்தைத் தொடரலாமா? அதனுடைய பணி என்ன? உள்ளிட்ட கேள்விகள் தொடர்ந்து மேலெழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நானும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







