ராஜஸ்தான் மாநிலம் சனவாடாவில் உள்ள மேக்வாலோன் கி பஸ்தி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், நேற்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வுக்காக மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
அப்போது பள்ளியில் இருந்த தொட்டியில் குடிநீரைக் குடித்த மாணவர்களுக்குச் சிறிது நேரத்திலேயே விசித்திரமான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அப்போது உடலில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங், மாணவர்களுக்கு ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடிநீரில் ஏதேனும் நச்சு கலந்ததா அல்லது அசுத்தமாக இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து இப்போது கேள்வி எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







