டெல்லியின் ஷாஹ்தாரா பகுதி விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீ மளமளவென பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
12 தீயணைப்பு வாகனங்களும் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்களும் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக அருகே உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், கட்டிடத்தின் பால்கனி வழியாக சுமார் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.







