சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கனமழையால் புளியந்தோப்பு கே.பி.பூங்கா சந்திப்பு, பட்டாளம், வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி, மண்ணடி, பட்டாளம், பிராட்வே சாலை, தண்டையார்பேட்டை நேதாஜி நகர், ஜிபி சாலை, எழும்பூர் தமிழ்ச் சாலை, கிண்டி கத்திபாரா, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை விரும்பாக்கம் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு தண்ணீர் தேங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்குள் தண்ணீர் ஒழுகுவது குறித்து காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2 ஆண்டுகாலம் நடைபெற்று இருக்க வேண்டிய இந்த மழை நீர் வடிகால் பணிகள் முதமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான முயற்சியால் 6 மாதங்களில் முடிந்துள்ளது. 400 மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு தற்போது நிலை மாறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த ராமசாமி சலாய் உள்ளிட்ட சாலைகளில் ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் தேங்கி இருந்தது. தற்போது, பழைய மழை நீர் வடிகால் தூர்வாரப்பட்டு சரி ஆகி உள்ளது. பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை மட்டுமில்லாது பல்வேறு சாலைகளில் நீர் தேக்கம் கடந்த ஆண்டுகளில் இருந்தது.
16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. வட சென்னை பகுதியில் ஒரு சுரங்கப்பாதை மட்டும், தியாகராய நகரில் இரு சக்கர வாகனம் செல்லும் சிறிய சுரங்கப்பாதையில் மட்டும் கொஞ்சம் நீர் தேக்கம் உள்ளது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் நீர் தூர்வாரப்பட்டு நீர் தேக்கம் இல்லை.
30 சென்டி மீட்டர் மழை பெய்து மழை நீர் தேக்கம் இல்லை.பி.டி. ராஜன் சாலை தூர்வாரப்பட வேண்டிய சாலை. கடந்த ஆண்டு இடுப்பு அளவு தண்ணீர் நின்றது. இப்போது 2 இஞ்ச் அளவுக்கு தான் உள்ளது. ஓரிரு இடங்களில் மழை பொழிந்து கொண்டிருக்கும் போதே இருக்கும் நீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது.பெரிய அளவு பாதிப்பு சென்னையில் இல்லை.
கள்ளுக்குட்டை பகுதி 20 ஆயிரம் குடியிருப்பு கொண்ட தாழ்வான பகுதி. அதற்கு சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிசை பகுதிகளில் மழை கால மருத்துவ சிறப்பு முகாம் நடத்த சொல்லி இருக்கிறோம். 200 மருத்துவ முகாம்களை வட்டத்திற்கு ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.