கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யபட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில் காதலி கிரிஷ்மாவால்
காதலன் ஷரோன்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலைக்கு பின் தடையத்தை அழித்ததாக கிரிஷ்மாவின் தாய் சிந்து மற்றும் தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை நிகழ்விடம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கிரிஷ்மா தமிழக பகுதியை சேர்ந்தவர் என்பதால் கேரள போலீசார், கிரிஷ்மாவின் தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரை முதலில் பளுகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் வசிக்கும் ராமவர்மன் சிறை பகுதியில், குளத்தின் கரை ஓரம் தூக்கி வீசப்பட்டிருந்த கஷாயம் மற்றும் ரப்பருக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பாட்டில் உட்பட நான்கு பாட்டில்களை கண்டெடுத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஏற்கனவே கிரிஸ்மா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழப்பு முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரிஷ்மாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாதி, மதம் கடந்து சாரோன் ராஜ் உடன் பழகியது உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. இதை உறவினர்கள் கண்டித்து வந்தனர். இந்நிலையில் தான் மற்றொரு திருமணம் செய்ய உறவினர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் சம்மதித்தேன். நாங்கள் தனியாக இருக்கும் படம் மற்றும் வீடியோக்களும் அவனிடம் இருந்தன. அதையும் நான் கைப்பற்ற வேண்டும் என நினைத்தேன். முதலில் நான் சாகலாம் என்று நினைத்தேன். பின்னர் திடீரென அந்த திரவத்தை அவன் வாங்கி குடித்தான். அதை நான் சாதகமாக பயன்படுத்தி கொண்டேன் என விசாரணையின் போது கிரிஷ்மா கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.







