தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் சேனல், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு செய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை, தாமரைநகர், மாதாநகர், குலாலர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக தாமரைநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளிய வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இந்த கனமழை காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேங்கிய இடங்களில் இருந்து மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.