காங்கிரசில் இருந்து விலகுவதாக சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த குலாம் நபி ஆசாத், அதில் ராகுல்காந்தியின் முயற்சிகள் படுதோல்வியை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல பதவிகளை வகித்துள்ள அவர் திடீரென காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் படுதோல்வியைச் சந்தித்து விட்டன என குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சி தள்ளப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் மாநில கட்சிகளிடமும் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை இழந்து வருகிறது. இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் தலைமையே காரணம். குறிப்பாக 2013-க்கு பிறகு ராகுல் காந்தி பொறுப்பேற்றதும் கட்சியின் நிலைமை மாற தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புணர்வற்ற தலைமை
பொறுப்புணர்வற்ற தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் என்பது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான விஷயம் என்றும் கட்சியில் பூத் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையால் தான் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்களை தொண்டர்கள் தேர்வு செய்வது இல்லை. அந்தவகையில் கட்சிக்குள் நடக்கும் மிகப் பெரும் மோசடிக்கு காங்கிரஸ் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைமைக்கு வருவதற்காகவா முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? என வேதனை தெரிவித்துள்ள அவர், இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்