மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தடுத்தி நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2ஆம் நாள் சுற்றுப் பயணமாக ஹெலிகாப்டர் மூலம் மொய்ரங் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு இரண்டு நிவாரண முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிறுமி ஒருவர், கலவரத்தால் தமது குடும்பம் பாதிக்கப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.
மணிப்பூர் மக்களை சந்தித்தது குறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மணிப்பூர் சகோதர சகோதரிகளின் துயரங்களைப் பார்க்கவும், கேட்கவும், உணரவும், இன்று மொய்ராங்கில் உள்ள நிவாரண மையங்களுக்குச் சென்றேன். வெறுப்பும் வன்முறையும் ஒரு பேரழிவு. நாம் அனைவரும் அதை அன்பாலும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலும் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.
இதையும் படியுங்கள் : ”பொறுப்பை ஒப்படைக்கிறேன்; சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்
மணிப்பூரில் வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான குரல் ஓங்கி ஒலிக்கிறது. மணிப்பூருக்கு இப்போது தேவை அமைதி மட்டுமே. நமது முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கியே ஒன்றுபட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.







